திருவெறும்பூர், ஜூலை 16: தனியார் மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து ஓஎப்டி தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசு, 41 படைகலன் தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதற்கு முன்னோட்டமாக கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றுவதற்குரிய செயல்களில் ஈடுபடுவதாக துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் துப்பாக்கி தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஐஎன்டியூசி, சிஐடியூ, தொமுச, அம்பேத்கர் யூனியன், பிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டம் காலை 7.30 மணிக்கு தொடங்கி 8.15 மணி வரை நடத்தினர். பின்னர் அனைவரும் 15 நிமிடம் பணிக்கு தாமதமாக சென்றனர்.