அறந்தாங்கி, ஜூலை 16: அறந்தாங்கியில் காவல்துறை சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.அறந்தாங்கி டி.எஸ்.பியாக கோகிலா பொறுப்பேற்ற பின்பு, அறந்தாங்கி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் அறந்தாங்கி நகரில் குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில், குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அறந்தாங்கி அப்துல்ஹமீது தெருவில் காவல்துறை சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு டிஎஸ்பி., கோகிலா தலைமை வகித்து பேசுகையில், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் குறித்து காவல்நிலையத்திற்கு தெரியபடுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சமூக ஆர்வலர் கரீன்முகமது உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.