கறம்பக்குடி, ஜூலை 16: கறம்பக்குடியில் திமுக சார்பில் நடக்க இருந்த மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.கறம்பக்குடி பொதுமக்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கறம்பக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிய மருத்துவமனை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதன் பிறகு புதிய கட்டிடத்திற்கு 33 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு முடிவடைந்து சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகியும் திறக்கபடாமல் உள்ளதை கண்டித்தும், உடனே திறக்க வலியுறுத்தியும், மந்தமாக நடைபெற்று வரும் பேருந்து நிலையம் பணிகளை வேகமாக முடித்து அண்ணா பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் வலியுறுத்தியும், அதிமுக அரசை கண்டித்து கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றியம் மற்றும் நகரம் சார்பில் நேற்று காலை 10 மணி அளவில் சீனிக்கடை முக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கறம்பக்குடி தாலுகா அலுவலகம் மற்றும் பேரூராட்சி சார்பில் சமாதான பேச்சுவார்த்தை நேற்று மாலை கறம்பக்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கறம்பக்குடி அரசு தலைமை மருத்துவ மனை கட்டிடம் ஜூலை மாதத்திற்குள் திறக்கப் படும் என்று உறுதி அளித்தனர். மேலும் கறம்பக்குடி அண்ணா பேருந்து நிலையம் கட்டும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்தமாதம் இறுதிக்குள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.