புதுக்கோட்டை, ஜூலை 16: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் 100 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு விழா நேற்று நடைபெற்றது.வன்னியன் விடுதியில் உள்ள வாழ பிராமணர் அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் புரவி எடுப்பு விழா நடத்துவது வழக்கம். இவ்விழா நடத்துவதன் மூலம் மழை பொழியும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் அப்பகுதியினர் ஆண்டுதோறும் நடத்தி வந்தனர். பல்வேறு காரணங்களால் கடந்த 100 ஆண்டுகளாக இவ்விழா நடத்தப்பட வில்லை.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாய் மழையின்றி வறட்சி ஏற்பட்டதை அடுத்து புரவி எடுப்பு விழா நடத்த ஊர் கூடி முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அறந்தாங்கி அருகே துவரடிமனையில் மண்ணால செய்யப்பட்ட 7 குதிரைகள், 2 காளை, 1 யானை மற்றும் பத்திரகாளி, தொட்டிச்சி, மகாகாளி, முனி, வீரபத்திரர் உள்ளிட்ட 21 சிலைகளை பொதுமக்களால் நேற்று சுமந்து வரப்பட்டது. கோயிலுக்கு அருகே சுமார் 300 மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டு சிலைகளுக்கு கண் திறக்கப்பட்டது.பின்னர், அங்கிருந்து மீண்டும் எடுத்துவரப்பட்டு கோயிலில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது, லேசான மழை பெய்தது மக்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து இரவில் ஆடு, கோழி பலியிட்டு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.