அறந்தாங்கி, ஜூலை 16: கந்து வட்டி கொடுமையில் இருந்து சாலை ஓர வியாபாரிகளை காத்திட அனைவருக்கும் அரசு கடனுதவி வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.அறந்தாங்கி நகர சாலையோர வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மாதர் சங்க ஒன்றிய தலைவர் கோமதி, சாலை ஓர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அழகர், பெரியநாயகி, செல்வி, கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறந்தாங்கி நகரில் சாலையோர வியாபாரிகளை கந்துவட்டி கொடுமையில் இருந்து பாதுகாத்திட நகராட்சியில் பதிவு செய்து ஆதார் அட்டை பெற்ற அனைவருக்கும் வழங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுதொழில் செய்ய மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.