ஈரோடு, ஜூலை16: சித்தோடு அருகே கன்னிமார்காடு என்ற இடத்தில் வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு அடுத்துள்ள சித்தோடு நல்லக்கவுண்டன்பாளையம் கிராமம் கன்னிமார்காடு என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், ஏராளமான குடும்பங்கள் குடிசை போட்டு கடந்த ஓராண்டாக வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 4,800 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. . இந்த கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அங்கு தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ள இப்பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் எந்த நேரமும் வடமாநில தொழிலாளர்கள் போதையிலேயே சுற்றித்திரிவதாகவும் புகார் எழுந்துள்ளது.