ஊட்டி, ஜூலை 16: ஊட்டியில் மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மூன்று நாட்களாக கனமழை பெய்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஆனால், இம்முறை கடந்த இரு மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாமல், அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மாவட்டத்தின் சில பகுதிகளில் வெயில் அடித்த போதிலும், ஊட்டி மற்றும் சுற்றப்புற கிராமங்களில் மழை பெய்து வந்தது. நேற்று காலை முதலே லேசான மழை பெய்தது. பிற்பகலுக்கு மேல் கனமழை பெய்து வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் குளிர் வாட்டியது. சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த 3 நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று குளிர் வாட்டியதால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.