×

சிறுமியை கடத்திய வாலிபருக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கோவை, ஜூலை 16: கோவையில் சிறுமியை கடத்திய வடமாநில வாலிபர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நிரஞ்சன்குமார்(21). கோவை, சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூரில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். அதே மில்லில் பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் அங்குள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். மில் குடியிருப்பில் தங்கியிருந்த போது அந்த சிறுமியுடன் நிரஞ்சன்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி சிறுமியை காணவில்லை. நிரஞ்சன்குமாரும் மாயமாகி இருந்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார்  விசாரித்ததில் சிறுமியை திருமண ஆசை காட்டி நிரஞ்சன் குமார் ரயிலில் பீகாருக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறுமியுடன் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த சிறுமி கோவையை சேர்ந்தவர் என்பதும், பீகாரை சேர்ந்த வாலிபர் நிரஞ்சன் குமார்(21) சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமியை குழந்தைகள் நல அமைப்பினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். நேற்று மருத்துவ பரிசோதனைக்கு பின் வடமாநில வாலிபரை கோவை ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதையடுத்து, வாலிபரை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...