காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

மதுரை, ஜூலை 16: முன்னாள் முதல்வர் காமராஜர் 117வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக நேற்று கொண்டாடப்பட்டது.

மதுரை கருப்பாயூரணி அப்பர் ஆரம்பப்பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவிற்கு மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மீனாவதி தலைமை வகித்தார். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொண்டபெத்தான் அரசு நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள், காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆசிரியர் பீட்டர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். ஆசிரியை உமா முன்னிலை வகித்தார். ஆசிரியை சுகிமாலா, காமராஜர் வரலாற்று சாதனைகள் பற்றி சிறப்புரையாற்றினார். மாணவ-மாணவிகளின் பேச்சு, கவிதை, பாடல், கும்மி, கோலாட்டம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

மதுரை ஒத்தக்கடை அரசு தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் (பொ) மாலா தலைமை வகித்தார். ஆசிரியை ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். விழாவில் காமராஜர் பற்றிய பாடல், கவிதை, பேச்சு, நாடகம் போன்றவைகள் நடந்தன. குழந்தைகள் காமராஜர் வேடமிட்டு வந்தது பாராட்டும்படி இருந்தது. ஆசிரியர் மோசஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியைகள் வாசுகி, முராத்பானு, விஜயலட்சுமி, சாந்தா, மெர்சி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில் மருதுபாண்டியன் தலைமை வகித்து காமராஜர் படத்திற்கு மாலையணிவித்து இனிப்புகள் வழங்கினார். ஐடிசி கல்வி பள்ளியில் வட்டார வள மேற்பார்வையாளர் சோபியா தலைமையில், ஆசிரியர் பயிற்றுனர்கள் முத்துலட்சுமி, சத்யா முன்னிலையில், முதல்வர் ஜூடிஜெயசீலி வரவேற்பில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. காமராஜர் மற்றும் தண்ணீர் சிக்கனம் தலைப்பில் நடந்த பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. காங்கிரஸ் சார்நில் மாநில இளைஞரணி தலைவர் ஹாசன் ஆரூண் தலைமையில் காமராஜருக்கு மரியாதை செலுத்தினர்.

பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் இந்து நாடார் உறவின்முறை சங்கம் சார்பாக காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பேச்சு, பாட்டு, ஓவிய போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பாலமேடு நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த விழாவில் வட்டார தலைவர் சுப்பாராயலு காமராஜர் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் துணைவேந்தர் கிருஷ்ணன், பதிவாளர் சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கப்பட்டது.

Related Stories: