அமைச்சர் தொகுதியில் 5 மாதமா குடிநீர் இல்லை

மதுரை, ஜூலை 16:  மதுரை விராட்டிபத்துவில் முத்துத்தேவர் காலனி. இது அமைச்சர் செல்லூர் ராஜூவின் மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்டது. இப்பகுதியை சேர்ந்த அய்யாச்சாமி, ராஜேஷ் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் நேற்று கலெக்டர் ராஜசேகரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், ‘விராட்டிபத்து முத்துதேவர் காலனியில் 300க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. பல போர்வெல்களில் தண்ணீர் சுத்தமாக இல்லை.  மாநகராட்சி சார்பில் தெருக்குழாயில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 5 மாதமாக திடீரென்று தண்ணீர் விநியோகத்தை நிறுத்திவிட்டனர். அதேபோல் குடிநீரும் காலனியில் உள்ள பல தெருக்களுக்கு வருவது இல்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் தினம், தினம் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் உடனே தண்ணீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர், உடனடியாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Related Stories: