பழநி வையாபுரி குளத்தை புனரமைத்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.51.85 கோடி ஒதுக்கீடு

பழநி, ஜூலை 16: பழநி நகரில் உள்ள குளங்களுக்கு வரும் கழிவுநீர் வாய்க்கால்களை புனரமைத்து 2 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூபாய் 51.85 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.பழநி நகரின் மையப்பகுதியில் வையாபுரிகுளம் உள்ளது. பக்தர்கள் நீராடும் வகையில் புனிதமாக கருதப்பட்டு வந்த வையாபுரிக்குளத்தின் பல மூலைகளிலும் சாக்கடை நீர் தற்போது கலக்கிறது.இதனால் இக்குளம் மினிகூவமாக மாறி விட்டது. கடும் துர்நாற்றம் ஏற்பட்டு, குளத்தில் உள்ள நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, வையாபுரி குளத்தில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக பழநி எம்எல்ஏ ஐபி செந்தில்குமார் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும், சட்டமன்றத்திலும் வலியுறுத்தி பேசினார். இதன்பயனாக தற்போது சட்டமன்றத்தில் நேற்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழக முதல்வர் சாக்கடை கால்வாய் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூபாய் 51.85 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்.இதுபோல் பழநி வரதமாநதி அணையில் இருந்து உபரியாக வெளியேறும் வெள்ளநீரை சத்திரப்பட்டி கருங்குளம் வரை கொண்டு சேர்க்க ரூபாய் 60 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பழநி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி கூறியதாவது,ரூபாய் 51.85 கோடியில் வையாபுரி குளத்தின் முன்பக்க கரை உயர்த்தப்பட்டு, கரையின்மேல் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைமேடை அமைக்கப்படும். ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை தடுக்க வேலி அமைக்கப்படும். பல இடங்களில் கலக்கும் கழிவுநீரை வாய்க்கால் அமைத்து ஒன்றிணைத்து வையாபரி குளத்தின் மேற்கு மூலைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து, விவசாய பயன்பாட்டிற்கு தகுந்தவாறு மாற்றி குளத்தில் கலக்கப்படும். இதுபோல் சிறுநாயக்கன் குளத்திலும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து, சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும். இதுபோல் ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் வரதமாநதி அணையில் இருந்து மழை காலங்களில் பாசன குளங்களுக்கு போக சண்முகநதி ஆற்றில் வீணாகக் கலக்கும் வெள்ளநீரை தடுத்து, பாப்பன்குளத்தில் இருந்து சத்திரப்பட்டி கருங்குளம் வரை வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது.இதன்மூலம் இவ்வாய்க்கால் வரும் வழியில் உள்ள நல்லதங்காள் ஓடை மற்றும் இதர தடுப்பணைகளுக்கும் நீர் சேமிக்க வழிவகை ஏற்படும். பாசன குளங்களுக்கு போக எஞ்சிய உபரிநீர் என்பதால் பாசன விவசாயிகளுக்கும் பாதிப்பு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: