×

கொடிநாள் நிதி வசூலில் சாதனை கலெக்டருக்கு சிறப்பு பரிசு

நாமக்கல், ஜூலை 16: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில், கொடிநாள் வசூல் ஆய்வுக் கூட்டம், கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. இதில் கொடிநாள் வசூலுக்காக அனைத்து துறைகளுக்கும் வழங்கப்பட்ட இலக்கினை எய்துவது குறித்து, கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில், நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக கொடிநாள் நிதி வசூல் செய்து கொடுத்த கலெக்டர் ஆசியா மரியத்திற்கு, முன்னாள் படைவீரர் நலத்துறையின் இயக்குநர் சார்பில் வெள்ளி சிறப்பு கேடயம் வழங்கப்பட்டது. மேலும், கொடிநாள் வசூலில் சாதனை படைத்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் ஜெயந்தி, மாவட்ட பதிவாளர் ரவி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், துரைசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலமுருகன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சசிகுமார், முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட இணைபதிவாளர் யசோதாதேவி உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில்  எஸ்பி அருளரசு, டிஆர்ஓ ரவிச்சந்திரன், சப்கலெக்டர் கிராந்திகுமார்பதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன், துணை கலெக்டர் பிரேமலதா(பயிற்சி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்