மேட்டூர், ஜூலை 16: மேட்டூர் அருகே காமராஜர் பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் மாணவர்கள் தாங்கள் ஆரம்ப கல்வி கற்ற பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கினார்கள்.மேட்டூர் அருகே நங்கவள்ளியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஆரம்ப கல்வி படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், கல்விச்சீர் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி, அங்கிருந்து லேப்டாப், கலர் பிரிண்டர், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட 2 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை கையில் ஏந்தி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர், பள்ளிக்கு சீர்வரிசையாக வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி, முன்னாள் மாணவர்களை மேளதாளம் முழங்க வரவேற்று உபசரித்து, சீர்வரிசையை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.