மாணவியை பின்தொடர்ந்து டார்ச்சர் தட்டிக்கேட்ட தந்தையை தாக்கிய வாலிபருக்கு வலை

சேலம், ஜூலை 16: சேலம் அருகே கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தையை, வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் அருகேயுள்ள வேம்படிதாளம் நடுவனேரி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(55). தறி தொழிலாளி. இவரது மகள் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். பேருந்தில் செல்லும் மாணவியை, அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த டார்ச்சரை பொறுக்க முடியாத மாணவி, தந்தையிடம் தெரிவித்தார். இதனை கேட்ட அவர், அந்த வாலிபரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், செல்வராஜை சரமாரியாக தாக்கி விட்டு, அவரது வீட்டின் ஓடுகளை நொறுக்கியுள்ளார். இதில் செல்வராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை  மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இதுகுறித்து காகாப்பாளையம் போலீசில் புகார் அளித்தும், அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் எஸ்.பி.அலுவலகத்தில்  புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: