பெண்ணாடம், ஜூலை 16: பெண்ணாடம் அடுத்த வடகரை ஊராட்சியில் உள்ள மினி டேங்க், கைப்பம்பு பழுதானதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.நல்லூர் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளது வடகரை. இக்கிராமத்தில் வேளாண் கூட்டுறவு வங்கி அருகில் உள்ள மினி வாட்டர் டேங்க், கைப்பம்பு பழுதடைந்து பலமாதங்களாகியும், கிராம நிர்வாகம் அவற்றை சீரமைக்காமல் உள்ளது. இதுசம்பந்தமாக ஒன்றிய அதிகாரியிடம் மனு கொடுத்தும் சீரமைக்கப்படவில்லை.இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வெகுதூரம் நடந்து சென்று வயல்வெளிகளில் குடிதண்ணீர் எடுத்து வருகின்றனர். இதுகுறித்து நல்லூர் ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும், கிராம நிர்வாகத்திடம் நேரில் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பழுதான மினிடேங்க், கைப்பம்பை நல்லூர் ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக பழுது நீக்கி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடகரை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.