அதிகாரிகள் அலட்சியத்தால் கழிவுநீர் குட்டையான நாகம்மை நகர் ஏரி: நிலத்தடி நீர் பாதிப்பு

ஆவடி, ஜூலை 16: திருமுல்லைவாயல் நாகம்மை நகர் ஏரியில் கழிவுநீர் விடப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டில், திருமுல்லைவாயல் நாகம்மை நகர் ஏரி உள்ளது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தேவி நகர், நாகம்மை நகர், ரவீந்திரன் நகர், அந்தோணி நகர், இ.எஸ்.ஐ அண்ணா நகர், ஜெ.பி நகர், ரயில்வே குடியிருப்பு, போலீஸ் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த ஏரி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது.நாளடைவில் இந்த ஏரியை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், ஏரி நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டன. மேலும், ஏரிக்கு வரும் மழைநீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், மழைக்காலங்களில் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. அதுமட்டுமின்றி ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து மெட்ரோ வாட்டர் நிர்வாகம் மேல்நிலை தொட்டியும், நீரேற்று நிலையமும் கட்டி உள்ளது. ஆவடி நகராட்சி நிர்வாகமாக இருந்தபோது, ஏரியை ஆக்கிரமித்து பூங்கா, வார்டு அலுவலகம், நம்ம டாய்லெட் (கழிப்பறை) ஆகியவை கட்டப்பட்டன.

தற்போது, அனைத்து ஆக்கிரமிப்பு நீங்கலாக,  ஏரி சுமார் 7 ஏக்கர் பரப்பளவு மட்டுமே உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பருவமழை சரிவர பெய்யாததால், இந்த ஏரி நீர் வறண்டது. இந்நிலையில், சமீபகாலமாக, நாகமணி நகர் பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தற்காலிக கால்வாய் வழியாக ஏரியில் விடப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளில்  இருந்தும் செப்டிக்டேங்க் கழிவுகள் ஏரியில் விடப்படுகிறது.  இதனால், தற்போது ஏரி கழிவுநீர் குட்டையாக மாறிவருகிறது. ஏரியில் கழிவுநீர் தேங்கி இருப்பதால், சுற்றுப்புற வீடுகளில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஏரியை சுற்றிய நாகம்மை நகர், இ.எஸ்.ஐ அண்ணா நகர், காவலர் குடியிருப்பு, அந்தோணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.  

இந்த ஏரியை இனியும் பாதுகாக்காமல் விட்டால், இன்னும் சில ஆண்டுகளில் அப்பகுதி மக்கள் நிலத்தடி நீர் அறவே இன்றி அவதிப்பட்டு வருவார்கள். மேலும் நாகம்மை  நகர் ஏரி நாளுக்கு நாள் பரப்பளவு குறைந்து மாயமாகி வருகிறது. மேலும்,  கழிவுநீரும் நாளுக்கு நாள் அதிக அளவில் ஏரி கலந்து மாசு ஏற்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். மேலும், ஏரியில் உள்ள கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்களுக்க டெங்கு, மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் ஏற்பட்டுகிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: