திருமங்கலம் மேம்பாலம் அருகே மாணவர்கள் சாலையை கடக்க வசதி செய்து தர வேண்டும்: போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 16: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ரங்கநாயகி தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டதால் சாலையை கடக்கும் பகுதி அகற்றப்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் சாலையை கடக்க சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரை தாண்டி ஆபத்தான முறையில் வருகிறார்கள்.

எனவே, திருமங்கலம் பாலம் அருகே பள்ளிக் குழந்தைகள் சாலையைக் கடக்க வசதி செய்து தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.

 இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆஜரான வக்கீல், சர்வீஸ் சாலை மூலம் பள்ளிக்குழந்தைகள் செல்லலாம் என்றார். மனுவை விசாரித்த நீதிபதிகள், சாலையை கடக்க ஏதுவாக வழக்கில் குறிப்பிடப்பட்ட இடத்தில் சிக்னலுடன் கூடிய சாலையை கடக்கும் வசதி செய்து தரவேண்டும்.  மேலும், சர்வீஸ் சாலையில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மற்றும் போக்குவரத்து இணை கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: