சென்னை, ஜூலை 16: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இதனால், சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒடிசா மாநிலம் நவுரங்க்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராம் சிங் (25) என்பவர், தனது மனைவி நீலாவதி (23) மற்றும் மகன் சோம்நாத் (3) ஆகியோருடன் சென்னையில் இருந்து ஒடிசா செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தார். ரயில் அதிகாலை என்பதால் தனது குடும்பத்தினருடன் ராம் சிங் ரயில் நிலையத்திலேயே படுத்து தூங்கியுள்ளார்.
நள்ளிரவில் நீலாவதி எழுந்து பார்த்தபோது மகன் சோம்நாத்தை காணவில்லை. அவர் தனது கணவர் ராம் சிங்கை எழுப்பி இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர் இருவரும் ரயில் நிலையம் முழுவதும் சிறுவனை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ராம் சிங் புகார் கொடுத்தார்.