சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயது ஆண் குழந்தை கடத்தல்: சிசிடிவி பதிவு மூலம் ஆசாமிக்கு வலை

சென்னை, ஜூலை 16: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இதனால், சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒடிசா மாநிலம் நவுரங்க்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராம் சிங் (25) என்பவர், தனது மனைவி நீலாவதி (23) மற்றும் மகன் சோம்நாத் (3) ஆகியோருடன் சென்னையில் இருந்து ஒடிசா செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தார். ரயில் அதிகாலை என்பதால் தனது குடும்பத்தினருடன் ராம் சிங் ரயில் நிலையத்திலேயே படுத்து தூங்கியுள்ளார்.

நள்ளிரவில் நீலாவதி எழுந்து பார்த்தபோது மகன் சோம்நாத்தை காணவில்லை. அவர் தனது கணவர் ராம் சிங்கை எழுப்பி இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர் இருவரும் ரயில் நிலையம் முழுவதும் சிறுவனை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ராம் சிங் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தமிழக ரயில்வே ஐ.ஜி. வனிதா உத்தரவின் பேரில், ரயில்வே சூப்பிரண்டு முருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசார் சிறுவன் சோம்நாத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:சிறுவன் சோம்நாத் காணவில்லை என புகார் வந்ததும் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தோம். அப்போது சிறுவனை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றது தெரியவந்தது. அந்த நபர் பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் சிறுவன் சோம்நாத்துடன் தாம்பரம் சென்று ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே சென்றது தெரியவந்தது. அவரை தேடி வருகிறோம், என்றனர்.

Related Stories: