பட்டுக்கோட்டை, ஜூலை 16: பட்டுக்கோட்டை வட்டாரத்தில் ஏனாதி, பாளமுத்தி, வேப்பங்காடு ஆகிய கிராமங்களில் மக்காசோள பயிரை தாக்கி பேரழிவை ஏற்படுத்தும் படைப்புழுவினை கட்டுப்படுத்துவது தொடர்பாக மக்காசோள பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடைபெற்றது. முகாமில் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல்துறை உதவிப் பேராசிரி–்யர் மதிராஜன் கலந்து கொண்டு மக்காசோளப்பயிரில் பெரும் அழிவை ஏற்படுத்தும் படைப்புழுவின் வாழ்க்கை சரிதம், படைப்புழுவின் தாக்குதல் அறிகுறிகள், கட்டுப்படுத்தும் உழவியல் முறை, கைவினை முறை, ரசாயன முறைகளில் கட்டுப்படுத்துவது, விஷ உணவு பொறி வைத்து கட்டுப்படுத்துவது குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறினார்.முகாமில் தஞ்சாவூர் வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) மதியரசன் கலந்து கொண்டு, விதைப்பு முதல் அறுவடைக்காலம் வரை ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைபிடித்து படைப்புழுவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்தார். அதன்படி கோடை உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழித்தல், விதை நேர்த்தி செய்து எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திக் கொள்ளுதல், அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் விதைப்பு பணியை மேற்கொள்ளுதல் மற்றும் பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை எடுத்துக் கூறினார்.