கும்பகோணம், ஜூலை 16: திருவிடைமருதூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியும், கும்பகோணத்தில் மழைநீர் சேகரிப்பு மனிதசங்கிலி, பேரணியும் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மத்திய அரசின் செயலாளர்கள் வால்மீகிபிரசாத் மற்றும் ஷீரா ஆகியோர் கொடியைத்து தொடங்கி வைத்தனர். பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், முருகன், தாசில்தார் சிவக்குமார் மற்றும் பள்ளி மாணவர்கள், அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று அலுவலகத்தை அடைந்தது.இதேபோல் கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் சார்பில் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி, பேரணி நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற விழிப்புணர்வு மனித சங்கிலியை நகராட்சி ஆணையர் (பொ) ஜெகதீசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.