அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

திருப்பூர், ஜூலை 12: திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதனை கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர், வீரபாண்டி போலீஸ் நிலைய எல்லைகுட்பட்ட மீனாம்பாறை செல்லும் ரோட்டில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் அதே பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீடுகளில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தொழிலாளர்கள் குடும்பத்துடனும், தனியாகவும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வாடகை குடியிருப்பு பகுதியில் நேற்று கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி வாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று ரத்த காயத்துடன் அழுகிய நிலையில் கிடந்தது. இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். இதனை கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  இதுகுறித்து போலீசார் கூறுகையில்: கடந்த ஒரு மாத்திற்கு முன் சிலர் இந்த வீட்டில் குடியிருந்துள்ளனர். இவர்களிடம் வீட்டின் உரிமையாளர் எந்த வித ஆவணங்களையும் வாங்காமல் குடிவைத்துள்ளார். இந்நிலையில் அங்கு வசித்த ஒருவரை சுத்தியலால் அடித்து கொலை செய்து அடையாளம் தெரியாமல் முகத்தை சிதைத்து விட்டு மீதமுள்ளவர்கள் தப்பிசென்றுள்ளனர். முதல் கட்ட விசாரனையில் இவர் கட்டட வேலைக்கு சென்று வருவதாக தெரியவந்துள்ளது. மேலும், ராமநாதபுரத்தை சேர்ந்த நூரல்ஹக்(30) எனும் பெயரில் உள்ள ஒருவரும் இந்த அறையில் தங்கியிருந்ததாக தெரிகிறது. விரையில் இறந்தவரின் பெயர் விபரங்கள் மற்றும் கொலைக்கான காரணம் தெரியவரும் என்றனர்.

Related Stories: