ஆத்தூர், ஜூலை 12: ஆத்தூர் புதிய பஸ் ஸ்டாண்டில், ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணியாற்றி வருபவர் முத்து (30). நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஆத்தூர் பஸ் ஸ்டாண்டிற்கு சீருடை அணிந்து காவலர் முத்து வந்திருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். தொடர்ந்து போதையில், நடைபாதை வியாபாரிகளிடம் தகராறு செய்து, மூடப்பட்டிருந்த வாழைப்பழ கடை முன்பு இருந்த வாழைத்தாரை எடுத்துக்கொண்டு பயணிகளை மிரட்டத் தொடங்கினார். இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும், வெளிப்புறமுள்ள பூக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர்தொட்டிகளை கீழே தள்ளி எட்டி உதைத்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் அவரை அங்கிருந்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.