×

கோரையாற்றில் மணல் கொள்ளை அதிமுக பிரமுகர் உள்பட 9 பேர் கைது 2 டிப்பர் லாரி, பொக்லைன், 2 பைக் பறிமுதல்

திருச்சி, ஜூலை 12: திருச்சி கோரையாற்றில் அதிகாலையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் உள்பட 9 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 2 டிப்பர் லாரி, ஒரு பொக்லைன், 2 பைக், ரூ.1.28 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதால் நீராதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காவிரியில் மணல் அள்ள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. சில இடங்களில் தடை நீக்கப்பட்ட பின்னர் அரசே மணல் குவாரிகளை நடத்துவதுடன் ஆன்லைன் மூலம் மணல் விற்று வருகிறது.இந்நிலையில், திருச்சி மேலபஞ்சப்பூர் பகுதியில் உள்ள கோரையாற்றில் மணல் திருட்டு நடப்பதாக எபுதூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கன்டோன்ெமன்ட் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் இரவு முழுவதும் மறைந்திருந்து நேற்று அதிகாலை அப்பகுதியில் திடீரென தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது டிப்பர்களில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து 9 பேரை பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய 2 டிப்பர் லாரி, ஒரு பொக்லைன் இயந்திரம், 2 பைக், 3 ரூ.1.28 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.விசாரணையில், பிடிபட்டவர்களில் ஒருவர் கள்ளிக்குடியை சேர்ந்த அதிமுக பிரமுகர் பாலு (எ)பாலசுப்ரமணியன் என்பதும், இவரது தலைமையில் மணல் அள்ளியதும் தெரியவந்தது. இவரிடம் நடத்திய விசாரணையில் ஆளுங்கட்சி முக்கிய புள்ளி ஒருவரின் பின்புலத்தில் மணல் அள்ளியது தெரியவந்தது. இதுவரை எவ்வளவு யூனிட் மணல் கடத்தி உள்ளனர். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மணல் விற்ற பணம் 1.28 லட்சம் ரகசிய தகவலையடுத்து நள்ளிரவு முதல் அதிகாலை வரை மறைந்திருந்த போலீசார், திடீரென மணல் அள்ளும் இடத்திற்கு சென்று சுற்றி வளைத்தனர். வாகனங்களை பறிமுதல் செய்த நிலையில் நள்ளிரவு 3 லோடு மணல் திருடி விற்று வைத்திருந்த ரூ.1.28 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். ஒரு லோடு மணல் ரூ.35 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ