போலி நிறுவனத்தின் பெயரில் கடன் பெற்று இந்தியன் வங்கியில் 4.22 கோடி மோசடி செய்த ஆசாமி கைது

சென்னை: இந்தியன் வங்கியில் 4.22 கோடி கடன் பெற்று மோசடி செய்தவரை சிபிஐ நீதிமன்றம் சிறையில் அடைத்தது. கிண்டியில் உள்ள இந்தியன் வங்கியில், சென்னையை சேர்ந்த ஜோசப் பிரேம்குமார் என்பவர் கடந்த 2012ம் ஆண்டு, ஒரு நிறுவனத்திற்காக 4.22 கோடி கடன் வாங்கியுள்ளார். இந்தநிலையில், அவர் போலி நிறுவனத்தின் பெயரில் வங்கி கடன் பெற்றிருப்பதாகவும். அந்த பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் புகார் எழுந்தது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் கடந்த 2014ம் ஆண்டு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இந்தியன் வங்கியின் கிண்டி கிளை மேலாளர் டோனிஜிபூவடி உதவியுடன், ஜோசப் பிரேம்குமார், சுரேஷ் ஆகியோர் இணைந்து ஏற்கனவே நிறுவனம் இருப்பது போல் ஆவணங்கள் தயார் செய்து, 4.22 கோடி கடன் வாங்கியதும், இந்த பணத்தை திருப்பி செலுத்தாமலும் ஏமாற்றி வந்ததும் சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் டோனிஜிபூவடி மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். ஆனால், ஜோசப் பிரேம்குமார் மட்டும் தலைமறைவானர். பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஜோசப்பை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ வக்கீல் தினகர் ஆஜர்படுத்தினார். அப்போது வழக்கை விசாரித்த 13வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, கைது செய்யப்பட்டவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Related Stories: