புதுச்சேரி, ஜூலை 12: உலக மக்கள் தொகை தினத்தையொட்டி புதுச்சேரியில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி போட்டி நடந்தது. பெருகி வரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்த வருடந்தோறும் உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நேற்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுவையில் சுகாதாரத்துறை சார்பில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளை ஒன்றிணைத்து விழிப்புணர்வு பேரணி போட்டி நேற்று நடந்தது. செஞ்சி சாலை பாரதிதாசன் திடலில் புறப்பட்ட பேரணி நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரை சாலையில் முடிவுற்றது. பேரணியில் 500க்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில் அவர்களில் பலர் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், குச்சிப்புடி, கதகளி, தப்பாட்டம், பரதம், கோலாட்டம், மேளதாளம் அடித்தும், மக்கள்தொகை பெருக்கத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், விழிப்புணர்வு ஓவியங்களை முகத்தில் பூசியும் பிரசாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து, பரிசளிப்பு விழா நடந்தது.