புதுச்சேரி, ஜூலை 12: பழைய காலத்தில் காவலர்கள் சைக்கிள்களில் ரோந்து செல்வதையும், சப்-இன்ஸ்பெக்டர்கள் புல்லட் வாகனத்தில் செல்வதையும் பார்த்திருப்போம். ஆனால் காலப்போக்கில் இது மாறியது. சாதாரண காவலர்கள் முதற்கொண்டு எஸ்ஐ, இன்ஸ்பெக்டர்கள் வரையிலும் மோட்டார்சைக்கிள்களில் தான் இப்போது ரோந்து சென்று வருகின்றனர். ஒவ்வொரு காவல்நிலையத்திலும் காவலர்கள், ஏட்டுகள், உதவி எஸ்ஐக்கள், எஸ்ஐக்கள், இன்ஸ்பெக்டர் என 40க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவர். இதில் பீட் எனப்படும் ரோந்து காவலர்கள் 3 ஷிப்ட்களில் பணியில் அமர்த்தப்படுவர். காலை காலை, மாலை, இரவு என 3 ஷிப்ட்களில் தலா 2 காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றங்களை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் ரோந்து காவலர்களின் பங்கு மிகவும் அவசியமானது. மோட்டார்சைக்கிள்களில் ரோந்து செல்வதில் சில நன்மைகள் இருந்தாலும், இதில் சில அசவுகரியங்களும் இருக்கின்றன. பைக்கில் செல்லும்போது போலீசார் வேகமாக கடந்து சென்று விடுகின்றனர். சைக்கிளில் மெதுவாக சத்தமின்றி ரோந்து செல்லும்போது நன்றாக கண்காணிக்க முடியும். தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே காவலர்கள் ரோந்து செல்ல சைக்கிள்கள் வழங்கப்பட்டது.