புதுச்சேரி, ஜூலை 12: புதுவையில் 10ம் வகுப்பு மதிப்பெண் அசல் சான்றிதழை பெற்ற மாணவ- மாணவியர் அதை வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகம், புதுவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம்தேதி தொடங்கி 29ம்தேதி முடிவுற்றது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இத்தேர்வினை எழுதினர். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29ம்தேதி வெளியிடப்பட்டது. இதில் 16,119 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் தேர்வெழுதியபோது கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு மதிப்பெண் விபரங்கள் தேர்வு துறையால் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பிறகு மேல்நிலை கல்விக்காக தேவைப்படும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிழ்கள் அந்தந்த பள்ளியிலே வழங்கப்பட்டது. மதிப்பெண் சான்றிதழ் நகலை கொடுத்து பிளஸ்1 வகுப்புகளில் மாணவ- மாணவியர் சேர்ந்தனர். இந்த நிலையில் அரசு தேர்வுத்துறை மூலம் அசல் மதிப்பெண் பட்டியல் புதுச்சேரி பள்ளிகளில் நேற்று முன்தினம் வழங்கும் பணி தொடங்கியது. மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றோருடன் வந்து அதை ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர். மேலும் அந்த பள்ளியிலே அமைக்கப்பட்டிருந்த மையத்தில் வேலைவாய்ப்பக பதிவையும் அவர்கள் மேற்கொண்டனர். பள்ளி மாற்றலாகி சென்றவர்கள் தட்டாஞ்சாவடியில் உள்ள வேலைவாய்ப்பக அலுவலகத்தில் அவற்றை பதிவு செய்ய உள்ளனர்.