×

ஒடுகத்தூர் அருகே ஒற்றையானை அட்டகாசம் கரும்பு தோட்டம், வாழை மரங்கள் சேதம்

அணைக்கட்டு, ஜூலை 12: ஒடுகத்தூர் அருகே ஒற்றையானை அட்டகாசம் செய்ததில் கரும்பு தோட்டம், வாழை மரங்கள் சேதம் அடைந்தது. அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, குருநாதன். விவசாயிகள் ரவி தனது நிலத்தில் வாழையும், குருநாதன் கரும்பு பயிரிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று காலை விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தபோது பயிர்கள் சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அங்கு ஒற்றை யானை கால் தடம் பதிந்திருப்பதை பார்த்து ஒடுகத்தூர் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த வருவாய் ஆய்வாளர் குமார், விஏஓ சக்தி ஆகியோர் விசாரணை நடத்தியதில் நேற்று முன்தினம் நள்ளிரவு கருத்தமலை காட்டில் இருந்து வந்த ஒற்றை யானை அங்கு பயிரிட்டிருந்த கரும்பு தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து அருகிலிருந்த 50 வாழை மரங்களையும் சேதப்படுத்தி விளை நிலங்களையும் நாசம் செய்தது தெரியவந்தது.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக யானைகள் நடமாட்டம் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் ஒற்றை யானை புகுந்திருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்