×

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இன்று காலை 6 மணி முதல் ரயிலில் குடிநீர் வினியோகம் அதிகாரிகள் தகவல்

ஜோலார்பேட்டை, ஜூலை 12: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இன்று காலை 6 மணி முதல் ரயிலில் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் எடுத்து செல்ல தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து, ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கரகுப்பத்தில் உள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை அருகே வரை 3.5 கி.மீ வரை ராட்சத பைப் லைன் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து, 2ம் கட்ட சோதனைக்கு பிறகு தண்ணீரின் வேகத்தை கூட்டுவதற்காக 3 மோட்டாரை ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டது. பின்னர், யார்டில் உள்ள பைப் லைன்களை சுத்தம் செய்து நேற்று அதிகாலை 1 மணியளவில் ரயில் மூலம் குடிநீர் ஏற்ற பைப்பில் உள்ள வால்வுகளுக்கு அதிகாரிகள் பூஜை செய்து ரயிலில் குடிநீரை நிரப்பினர்.

இதில், 50 வேகன்கள் கொண்ட ரயிலில் 27 வேகன்களில் 70 ஆயிரம் கொள்ளளவு தண்ணீர் நிரப்பினர். மீதமுள்ள வேகன்களில் பாதி அளவு தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் தண்ணீர் நிரப்பப்பட்ட வேகன்களை சோதனை செய்தனர். இதையடுத்து பாதுகாப்பு மற்றும் வழித்தடம் குறித்து ஆலோசித்தனர். அப்போது வேகன்கள் முழுமையாக தண்ணீர் இருக்க கூடாது என முடிவு செய்தனர். அதன்படி வேகன்களிலும் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீரை குறைக்கும்படி தெரிவித்து, 50 ஆயிரம் லிட்டர் அளவிற்கு தண்ணீர் நிரப்பினர். மேலும், வேகன்களில் கூடுதலாக இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, ரயில் இன்ஜினை இணைத்து ரயில்வே அதிகாரிகள் தயார் நிலையில் நிறுத்தினர்.

இதையடுத்து ஜோலார்பேட்டை உதவி கோட்ட பொறியாளர் அபிஷேக் வர்மா, முதுநிலை பகுதி பொறியாளர் கணேசன் நேற்று மாலை யார்டில் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், `நாளை(இன்று) காலை 6 மணியளவில் மெட்ரோ, ரயில்வே மற்றும் தமிழ்நாடு குடிநீர்வாரிய அகாரிகள் குடிநீர் எடுத்து செல்லும் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளனர். முதல் 2 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக, ஒரு நாளைக்கு ஒரு டிரிப் மட்டும் சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டுச்செல்லப்படும். பின்னர் படிப்படியாக டிரிப்கள் அதிகரிக்கப்படும். சென்னை வில்லிவாக்கத்திற்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் முன்பு 3 முறை பரிசோதிக்கப்படும்’ என்றனர்.

Tags :
× RELATED ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விலை கிடு...