திருப்பூர், ஜூலை 11: அவிநாசி கோட்டம் அனுப்பர்பாளையம் உபகோட்டம் வெங்கமேடு மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சுப்பிரமணி (41) இந்நிலையில் நேற்று அதிகாரிகள் கூறியதன் பேரில் செட்டிபாளையம் கிராமம் வெங்கமேடு மகாவிஷ்ணு நகரிலுள்ள மின்சார டிரான்பார்மரில் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டு திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இது குறித்து தொமுச நிர்வாகி சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுப்பிரமணிக்கு உடனடியாக தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இனிமேலும் காலம் கடத்தினால் தொமுச சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்