திருப்பூர், ஜூலை 10: திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அதேபோல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். மேலும், ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும்.