சுரண்டை, ஜூலை 10: சேர்ந்தமரம் அருகே உள்ள திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவரது மனைவி காளியம்மாள்(50). இவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மதியம் தோட்டத்திற்கு சென்றார். இதை நோட்டமிட்டு காளியம்மாள் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 100 கிராம் நகை மற்றும் ரூ.6 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த காளியம்மாள் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பீரோவை உடைத்து நகை திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.இதுகுறித்து காளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உத்திரகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.