திருச்சி, ஜூன் 27: திருச்சி முக்கொம்பு மேலணையில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து நீர் அளவிடும் கருவிகளை பார்வையிட்டனர். அக்குழு இன்று கல்லணையில் ஆய்வு செய்கிறது.மத்திய அரசின் நீர்வள ஆணையம் சார்பில் முக்கிய ஆறுகளில் நீர் அளவிடும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கினால் உருவாகும் தண்ணீரை அளவிடுதல் மற்றும் நீர் திறந்து விடுவதை கண்காணிப்பதற்காக இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. திருச்சி முக்கொம்பு மேலணையில் பொருத்தப்பட்டுள்ள நீர் அளவிடும் கருவிகளை நேற்று முன்தினம் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்து பார்வையிட்டனர். இந்த ஆய்வு குழுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகளுடன் காவிரி நீரை பங்கிட்டு கொள்ளும் மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பொதுப்பணித்துறையின் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் நிலையிலான தலா 2 அதிகாரிகள் இடம் பெற்று உள்ளனர்.