சேலம், ஜூன் 27: சேலம் அம்மாப்பேட்டையில் ஜல்லி கற்களை கொட்டி 4 மாதமாகியும் சாலை அமைக்காததை கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட 37வது வார்டில் உள்ள குருநாதன் காட்டில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சாலை அமைப்பதற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், அதன்பின்னர் சாலை அமைப்பதற்கான எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை அம்மாப்பேட்டை மெயின்ரோட்டில் திரண்டனர். திடீரென தனியார் மருத்துவமனை முன்பு, சேலம்-ஆத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘இப்பகுதியில் சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டுப்பட்டு 4 மாதங்களை கடந்தும், இன்னும் தார் ஊற்றப்படவில்லை. இதனால், மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து மறியலில் ஈடுபட்டுள்ளோம். தார் சாலையை முழுமையாக அமைக்கும் வரை ெதாடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்,’’ என்றனர். தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.