வருஷநாடு, ஜூன் 27: கடமலை மயிலை ஒன்றியத்தில் செயல்படாமல் உள்ள அரசு சேவை மைய கட்டிடம் எப்போது செயல்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.கடமலை மயிலை ஒன்றியத்தில் 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. எட்டப்பராஜபுரம், கண்டமனூர், துரைச்சாமிபுரம், ஆத்தங்கரைபட்டி, பாலூத்து, கடமலைக்குண்டு மயிலாடும்பாறை, பொன்னன்படுகை, குமணன்தொழு, மேகமலை,வருசநாடு, சிங்கராஜபுரம் தங்கம்மாள்புரம், முத்தாலம்பாறை, மூலக்கடை மந்திச்சுனை, தும்மக்குண்டு, முறுக்கோடை, நரியூத்து போன்ற ஊராட்சிகளில் அரசு தரப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு சேவை மைய கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.அந்த கட்டிடத்தில் முதியோர் உதவி தொகை, 100 நாள் வேலை செய்வோர்களுக்கு சம்பளம் கொடுப்பது போன்றவை சம்பந்தமாக ஆவணங்கள் வைப்பதற்கும் சேவை செய்வதற்கும் இந்த சேவை மைய கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.ஆனால் சில இடங்களில் சேவை மைய கட்டிடம் தொடர்ந்து செயல்பாடில்லாமல் கதவுகள் பூட்டியே கிடக்கின்றது. சில இடங்களில் சேவை மைய கட்டிடம் கட்டி முடித்த பின்பு இன்னும் திறப்பு விழா காணாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் குறிப்பிட்ட மையங்களில் வைத்து பொதுமக்களுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் 100 நாள் திட்டம் காசுகளை கொடுப்பதால் இந்த சேவை மைய கட்டிடம் திறக்கப்படாமல் இருப்பதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.