கோவை, ஜூன்27:கோவையில் 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் தாயின் கள்ளக்காதலனை ஒரு மாதமாக போலீசார் தேடி வருகின்றனர். கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு கோயில் அருகே கடந்த மே மாதம் 27ம் தேதி 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு கிடந்தது. போலீசாரின் விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அதன் தாய் கோவை காரமடையை அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்த ரூபினி(22) கொலை செய்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். ரூபினியின் கள்ளக்காதலன் கோவை அடுத்த கோவில் பாளையத்தை சேர்ந்த தமிழ் என்பவர் தலைமறைவானார்.
போலீசாரிடம் ரூபினி அளித்த வாக்குமூலத்தில்: என்னுடைய கணவர் பிரிந்து சென்று விட்டார். பின்னர் எனக்கு தமிழ் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தோம். இதற்கு குழந்தை இடையூறாக இருப்பதாக 2 பேரும் கருதினோம். இதனையடுத்து குழந்தையை கள்ளக்காதலன் தமிழுடன் சேர்ந்து கொலை செய்தேன் என்று தெரிவித்திருந்தார்.இதனையடுத்து போலீசார் 3 தனிப்படை அமைத்து கொலையாளி தமிழை தேடி வந்தனர். நேற்றுடன் ஒரு மாதமாகியும் கொலையாளி பற்றி எந்த விதமான துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.