×

நிலுவை சம்பளம் வழங்க கோரி நூற்பாலை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல், ஜூன் 27: நிலுவை சம்பளம் வழங்க கோரி திண்டுக்கல்லில் நூற்பாலை அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல்- மாலப்பட்டி சாலையில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் இந்த நூற்பாலை மூடப்பட்டது. இதுவரை திறக்கவில்லை. நூற்பாலையை மூடுவதற்கு முன்பு 1 மாதம் சம்பளமாக ரூ.52 லட்சம் வழங்கவில்லை. மேலும் நிலுவையில் உள்ள பயணப்படி, போனஸ் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கவில்லை. இதை தருமாறு நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் இதுவரை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள நூற்பாலை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சம்பளம், பயணப்படி, போனஸ் பிரச்னைக்கு தீர்வு காண கோரி அலுவலகத்தின் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் திண்டுக்கல் வடக்கு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED வெயிலின் தாக்கத்தால் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்