அலங்கை/குன்றம், ஜூன் 27: திருப்பரங்குன்றத்தில் ரூ.32 லட்சம், அழகர்கோவிலில் ரூ.30 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலாகியிருந்தது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உண்டியல்கள் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.30 லட்சத்து 55 ஆயிரத்து 207 பணமும், தங்கம் 59 கிராமும், வெள்ளி 229 கிராமும், வெளி நாட்டு கரன்சிகளும் இருந்தன.இதேபோல் இக்கோவிலின் உபகோவிலான சோலைமலை முருகன் கோவிலின் உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.9 லட்சத்து 11 ஆயிரத்து 854 பணமும், தங்கம் 5 கிராமும், வெள்ளி 353 கிராமும், வெளி நாட்டு கரன்சி நோட்டுகளும் இருந்தன. உண்டியல் எண்ணும் பணியில் அய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஈடுபட்டிருந்தனர். கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி அதிகாரி ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோயில் துணை ஆணையர் (பொறுப்பு ) மாரிமுத்து, மணிமாறன், நெடுஞ்செழியன், புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணிக்கை நடைபெற்றது. கோயில் ஊழியர்களும், மாணவர்களும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் காணிக்கையாக 396 கிராம் தங்கம், மூன்று கிலோ 506 கிராம் வெள்ளி மற்றும் ரொக்கமாக ரூ.32 லட்சத்து 4 ஆயிரத்து 478 இருந்தது.