உளுந்தூர்பேட்டை, ஜூன் 27: உளுந்தூர்பேட்டையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூடாததால், அதில் குட்டைபோல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர்.உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக சாலையில் போடப்பட்ட பள்ளத்தினை சரியாக மூடப்படாமல் உள்ளதால் சாலையில் மழைநீர் தேங்கி குட்டை போல் உள்ளது. உளுந்தாண்டார்கோயில் செல்லும் சாலையில் கடந்த இரண்டு நாட்களாக குட்டை போல் மழைநீர் தேங்கி நிற்பதால் இந்த வழியாக செல்லும் உளுந்தாண்டார்கோயில், நகர், செம்மணங்கூர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இரவு நேரத்தில் வயதானவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த அவலநிலையை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.