புதுச்சேரி, ஜூன் 27: புதுவை, நல்லவாடு, சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (42). வழக்கறிஞரான இவர் நேற்று வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டு நீதிமன்றத்துக்கு வந்து கொண்டிருந்தார். அவர் நைனார்மண்டபம் அருகே வந்தபோது பின்னால் வேகமாக வந்த மற்றொரு வாகனம் அவர் மீது மோதுவதுபோல் உரசவே, தர்மலிங்கம் அந்த நபரை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே சிறிய பிரச்னை எழுந்த நிலையில், தர்மலிங்கம் அங்கிருந்து புறப்பட்டு பைக்கில் கிளம்பிச் சென்றார். ஆனால் வழக்கறிஞரை தனது வாகனத்தில் பின்தொடர்ந்த அந்த நபர், மரப்பாலம் அருகே அவரை வழிமறித்து அசிங்கமாக திட்டி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து தர்மலிங்கம் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் 4 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்த போலீசார், சம்பந்தப்பட்ட வண்டி நம்பரை கொண்டு குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், அந்த வண்டி தவளகுப்பத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் தற்போது அந்த வண்டியை அவர் பயன்பாட்டில் வைத்திருக்கவில்லை என கூறிய நிலையில் சம்பவத்தன்று அதை ஓட்டிவந்த நபர் யார்? என்பதை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.