புதுச்சேரி, ஜூன் 27: புதுவை பல்கலைக்கழகத்தில் தனி தனியாக இயங்கி வந்த இரண்டு அதிகாரிகள் நலச்சங்கங்கள் தற்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இரு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் வேலாயுதம், முனைவர் சிபி, கோவி.வெங்கடஸ்வரன், மகேஷ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிவிக்கை: புதுவை பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு பெற்ற சங்கங்களாக இரண்டு அதிகாரிகள் நலச்சங்கங்கள் கடந்த காலங்களில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புதுவை பல்கலைக்கழக அதிகாரிகள் சங்கம் மற்றும் புதுவை பல்கலைக்கழக பிரிவு ஏ மற்றும் பி அதிகாரிகள் நலச்சங்கம் என்ற பெயர்களில் இரண்டு சங்கங்கள் இயங்கி வந்தன.இந்நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு துணைவேந்தர் குர்மீத்சிங் விடுத்த கோரிக்கையை ஏற்று இரண்டு சங்கங்களும் ஒன்றாக தற்போது இணைக்கப்பட்டுள்ளன. இனி வருகின்ற காலங்களில் புதுவைப் பல்கலைக்கழக அதிகாரிகள் சங்கம் என்ற பெயரில் ஒரே சங்கம் செயல்படும்.இது தொடர்பாக கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற சங்கங்கள் கூட்டுப் பொதுக்குழு இணைப்பு கூட்டத்திற்கு புதுவைப் பல்கலைக்கழக அதிகாரிகள் சங்கத் தலைவர் திரு வேலாயுதம் தலைமைத் தாங்கினார். அதோடு சங்கங்கள் இணைக்கப்பட வேண்டியதன் காரணத்தையும், அவசியத்தையும் விரிவாக விளக்கி பேசினார்.இக்கூட்டத்தில் புதுவை பல்கலைக்கழக அதிகாரிகள் சங்கத்திற்கு நடைபெறவுள்ள புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அதிகாரிகளாக கோவி. வெங்கடேஸ்வரன், நல்ல பெருமாள் பிள்ளை ஆகியோர் ஒரு மனதாக தேர்வுச் செய்யப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.