புதுச்சேரி, ஜூன் 27: புதுவையில் 55 மாத நிலுவை சம்பளத்தை கேட்டு பாசிக் தலைமை அலுவலகம் முன்பு ஏஐடியுசி பாசிக் ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளனர். புதுவை பாசிக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும், 55 மாதத்திற்கு மேலாக உள்ள நிலுவை சம்பளத்தை கொடுக்க வேண்டும், தினக்கூலிகளை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தியை வேறுதுறைக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து ஏஐடியுசி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று தொடர் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணாவை, மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பாசிக் சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயல் தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பாசிக் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள், பாசிக் நிறுவனம் லாபகரமாக நடத்தக்கூடிய தொழில்களை தொடர்ந்து நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மற்ற கோரிக்கைகளையும் அரசு உடனே நிறைவேற்றாவிடில் அனைத்து தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ேளாம் என்றார்.