×

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் எடுத்து செல்ல அதிகாரிகள் ஆய்வு 6 மாதங்களுக்கு எடுத்துச்செல்ல முடிவு

ஜோலார்பேட்டை, ஜூன் 27: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் எடுத்து செல்ல அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். 6 மாதங்களுக்கு இங்கிருந்து குடிநீர் எடுத்துச்செல்ல முடிவு ெசய்யப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு கடந்த வாரம் ₹65 கோடி நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 22ம் தேதி மெட்ரோ, ரயில்வே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முதற்கட்டமாக ஜோலார்பேட்டை மேட்டுச்சக்கர குப்பம், கேத்தாண்டப்பட்டி, பார்சம்பேட்ைட ஆகிய பகுதியில் பார்வையிட்டனர். அப்போது, காவிரி குடிநீரை எடுத்துச்செல்வதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், நேற்று ஜோலார்பேட்டை ரயில்வே உதவிக்கோட்ட பொறியாளர் ரமேஷ் சர்மா, சீனியர் செக்ஷன் இன்ஜினியர் சுரேஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர். மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே வரை சுமார் 3.5 கி.மீ தூரத்திற்கு ராட்சத குழாய்கள் அமைத்து அதிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் எடுத்து செல்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து திருப்பத்தூர் குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது: ‘ஜோலார்பேட்டை நகராட்சிக்கு தினமும் 13 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குடிநீர் அதிகரிப்பின் காரணமாக 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனென்றால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ராட்சத குழாய் வழியாக காவிரி கூட்டு குடிநீர் மேட்டுச்சக்கர குப்பம் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் விடப்பட்டு, அங்கிருந்து ரயிலில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது’ என்றார்.

மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை உட்பட பல்வேறு துறையிடம் உரிய அனுமதி பெற்று சென்னைக்கு தினமும் 10 எம்எல்டி தண்ணீர் 4 முறை ரயிலில் கொண்டு செல்லப்படும். இவ்வாறு தொடர்ந்து 6 மாதத்திற்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...