×

குடும்ப தகராறில் விபரீதம் நாட்டு துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை அணைக்கட்டு அருகே பரபரப்பு

அணைக்கட்டு, ஜூன் 27: அணைக்கட்டு அருகே குடும்ப தகராறில் நாட்டு துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா மேல் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(48), விவசாயி. இவரது மனைவி சித்ரா(35). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், ஜெய்சங்கருக்கும், அவரது மனைவி சித்ராவுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் ஜெய்சங்கர், தனது குடும்ப செலவுக்காக சிலரிடம் கடன் வாங்கியிருந்தாராம். கடனை செலுத்த முடியாததாலும், குடும்ப பிரச்னை காரணமாகவும் மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஜெய்சங்கர் வீட்டில் இருந்து தனக்கு சொந்தமான நிலத்துக்கு சென்றார். நேற்று அதிகாலை 4 மணியளவில் நிலத்தில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாராம். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தபோது, ஜெய்சங்கர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததர். விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக, ஜெய்சங்கர் உரிமம் இல்லாமல் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்தது கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்