×

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர கூட்டம்

மதுராந்தகம், ஜூன் 27: ஆர்டிஓ தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில், மதுராந்தகம் ஆர்டிஓ மாலதியிடம் மனு அளித்தனர். பின்னர், மாவட்ட  செயலாளர் ஹரிகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மதுராந்தகம், செய்யூர் தாலுகாக்களில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர கூட்டத்தை ஆர்டிஓ முன்கூட்டியே தேதி அறிவித்து கூட்ட வேண்டும். இந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட நல அலுவலர்,  வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியும். மாற்றுத்திறனாளிகளுக்காக 22 அரசு நலத்திட்டங்கள் உள்ளன. அதுபற்றி, பலருக்கும் தெரியவில்லை. இதுபோன்ற கூட்டங்கள் மூலம், அந்த திட்டங்கள் குறித்து  அறிந்து மாற்றுத் திறனாளிகள் பயனடைய முடியும். ஆனால் இதுபோன்ற கூட்டங்கள் இப்பகுதியில் நடத்துவதில்லை.தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் உள்பட பல மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர கூட்டம் நடக்கிறது. அதே போல் இப்பகுதியிலும் ஆர்டிஓ தலைமையில் மாதந்தோறும் நடத்த வேண்டும்.விரைவில் மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டம் நடத்துவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் ஒன்று திரட்டி ஆர்டிஓ அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்  என்றார்.அவருடன் சங்க மாவட்ட குழு உறுப்பினர் குமார், மதுராந்தகம் வழக்கறிஞர் ஜான் பாஷா, நிர்வாகிகள் மூர்த்தி உள்பட பலர் இருந்தனர்.


Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...