×

பிராட்டியூரில் கடந்தாண்டு கட்டிய கழிவுநீர் கால்வாய் கான்கிரீட் பாலம் சேதம் பாஜக ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூன் 26: திருச்சி பிராட்டியூரில் இனியானூர் ரோட்டை இணைக்கும் சாலையில் பெரிய கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் கடந்தாண்டு கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. இந்த பாதையில் வேன், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகம் சென்று வந்ததில் கான்கிரீட் பாலம் இடிந்து சேதமடைந்தது. இந்த பாலம் வழியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் சென்று வருகின்றனர். இந்த பாலத்தை கடக்கும்போது மாணவர்கள் பாலத்தில் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
தரமற்ற பாலம் அமைத்ததை கண்டித்தும், பாலத்தை உடனடியாக சீரமைக்க கோரியும், இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரியும் பாஜ சார்பில் அப்பகுதி மக்கள் இடிந்த பாலம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜ மண்டல துணை தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். பொறுப்பாளர் விவேகானந்தன், நிர்வாகிகள் இல.கண்ணன், பார்த்திபன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தகவலறிந்த நாச்சிக்குறிச்சி ஒன்றிய அதிகாரி ஜெயச்சந்திரன், எடமலைப்பட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 2 நாட்களில் சரி செய்வதாக அதிகாரி கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி