விருதுநகர், ஜூன் 26: விருதுநகரில் வாறுகால் அடைப்பால், பல இடங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், நர்சிங் பள்ளி மாணவியர் அவதிப்படுகின்றனர்.விருதுநகர் நகராட்சியில் பல இடங்களில் வாறுகால்களில் மண்மேவிக் கிடக்கிறது. இதனால், வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகள் மற்றும் அதனை ஒட்டிய தனியார் நிலங்களில் தேங்குகிறது.நகரில் உள்ள மல்லாங்கிணர் ரோட்டில் அரசு மருத்துவமனை தொடங்கி, ரோசல்பட்டி ஊராட்சி வரை 850 மீ தூரத்தில் 400 மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைத்துறை ரோடு போடும்போது வாறுகால் கட்டப்பட்டுள்ளது. பிள்ளையார்கோயில் முதல் ரோசல்பட்டி ஊராட்சி வரை 450 மீ வாறுகால் தரமாக முழுமையாக கட்டப்படவில்லை.இந்நிலையில், அரசு தலைமை மருத்துவமனை செப்டிக் டேங்க் கழிவுநீரை பாதளாச்சாக்கடையில் அடைப்பு ஏற்படும்போது, வாறுகாலில் பம்பிங் செய்கின்றனர். பம்பிங் செய்யப்படும் தூர்நாற்றம் மிகுந்த மருத்துவமனை கழிவுநீர் மருத்துவமனையை ஒட்டிய வாறுகாலில் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீர் வாறுகாலை ஓட்டி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு, ஸ்கேன் மையம், நர்சிங் பயிற்சி பள்ளி மாணவியர் பள்ளி, விடுதிகள் உள்ளன. நர்சிங் பயிற்சி பள்ளி, விடுதியில் தங்கி இருக்கும் 450 மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தலைமை அஞ்சலகம் முன்பகுதியில் உள்ள தனியார் பள்ளி முன்புறம் செல்லும் வாறுகாலில் தேங்கி நிற்கிறது. இதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் 600 மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவவும் வாய்ப்புகள் இருக்கிறது.எனவே, நகராட்சி நிர்வாகம் மல்லாங்கிணர் ரோட்டில் உள்ள வாறுகால் அடைப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகள், மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.