விழுப்புரம், ஜூன் 26: விழுப்புரம் அருகே பிளாஸ்டிக் அரவை ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அடுத்துள்ள வேடம்பட்டில் பிளாஸ்டிக் அரவை ஆலை செயல்பட உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை அரைத்து மாவாக்கி கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பிவைக்க உள்ளனர் இதனிடையே நேற்றைய தினம் அப்பகுதி இளைஞர்கள் இந்த ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது இளைஞர்கள் கூறுகையில், வெளியிலிருந்து வேன்களில் கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி தீவைத்து எரிக்கப்படுவதால் புகைமூட்டம் ஏற்பட்டு கிராமங்களில் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் சிமெண்ட் கம்பெனி, ஆயில் கம்பெனி என்று கூறினார்கள். போலீசார் எதுவாக இருந்தாலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஆலைஉரிமையாளரிடம் கேட்டபோது, சிமெண்ட் ஆலைகளுக்கு பிளாஸ்டிக் அரவை செய்து அனுப்பிவைக்கும் ஆலைதான். மற்றபடி பிளாஸ்டிக் எரிப்பு போன்ற எதுவும் கிடையாது. கம்பெனி துவக்கம் என்பதால் தேவையில்லாத முட்செடிகள், ேதவையற்ற பொருட்களை தீவைத்து எரித்ததை தவறாக புரிந்துகொண்டு இளைஞர்கள் திரண்டுவந்துள்ளனர். முறைப்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களிடமும் அனுமதிபெற்று இயங்குகிறது. நகராட்சியில் எப்படி பிளாஸ்டிக்குகளை அரைத்து சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்புகிறார்களோ அதன்படியே நாங்களும் ஆலைகளுக்கு அனுப்பிவைக்க உள்ளோம். பிளாஸ்டிக் சாலை, சிமெண்ட் சாலைகளுக்கு கலவையாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.