திருச்செந்தூர் அருகே ஆட்டோ மீது கார் மோதி 7 பேர் படுகாயம்

உடன்குடி,ஜூன்26:   திருச்செந்தூர் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். திருச்செந்தூர் அருகே காயல்பட்டினம், சுலைமான் நகரை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (32). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த இருநாட்களுக்கு முன்னர் திருச்செந்தூரில் நடந்து வரும் பொருட்காட்சிக்கு தனது ஆட்டோவில் காயல்பட்டினத்தை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 6 பேரை ஏற்றிக் கொண்டு வந்தார்.பொருட்காட்சியை பார்த்துவிட்டு இவர்கள் 6பேரும் காயல்பட்டினத்துக்கு அதே ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தனர். வீரபாண்டியன்பட்டினம் வளைவில் ஆட்டோ வரும்போது திடீரென எதிரே வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ கவிழ்ந்ததில் டிரைவர் சாகுல்ஹமீது(32), முகமது காசிம் (18), ஹபீலா (56), நசுகா (49), ஹசிகா கரீனா, ரபீக் (60), கலீமா பாரீஷா ஆகிய 7பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: