உடன்குடி, ஜூன் 26: தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் வேலைக்கு வரும் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், அனைத்து பகுதி மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. திருச்செந்தூரில் நடந்த போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முத்துகுமார், ஒன்றிய தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தனர். இதில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கிடவேண்டும், தாமதமின்றி பாக்கி சம்பளத்தை வழங்கிடவும், சட்டக்கூலி 229ரூபாயை குறைக்காமல் வழங்கவேண்டும், வேலை செய்த 15நாட்களுக்குள் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இசக்கியப்பனிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அவர் தகுதியுள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படும். மரக்கன்று நடும் பணிக்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என கூறி மனு அளிக்க வந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.